Tuesday, July 26, 2022

அவர்கள் நிச்சயமாக உங்களைத்தான் வாசிப்பார்கள்..!


இப்போதெல்லாம் நம்முடைய எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக, நாட்டின் பாசிச சக்திகளை எதிர்கொள்ள வேண்டுமானாலும் சரி, கொரோனா பெருந் தொற்று பேரிடர் காலத்தில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்கின்ற நெருக்கடி ஆனாலும் சரி, ‘இது அழைப்புப் பணிக்கான சிறப்பான சந்தர்ப்பம்’ என்றே சொல்லப்படுகின்றது. 

நம்முடைய தோழர்கள் மத்தியிலும் அழைப்புப் பணி பற்றி எத்தகைய புரிதலும் சித்திரமும் பதிந்திருக்கின்றது எனில், குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின் சுருக்கமான போதனைகளைக் கொண்ட புத்தகங்களின் செட், குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகள், ஒரு சில காணொளிகள் போன்றவற்றை சகோதர சமுதாயச் சொந்தங்களுக்குக் கொடுப்பதையும், ஏதேனுமோர் மாநில, தேசிய அளவிலான பரப்புரையின்போதோ சிறப்பு வாரத்தின்போதோ சுறுசுறுப்பாக இயங்கி சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள், அறிவுஜீவிகள், அண்டைவீட்டார்கள் போன்றோரைச் சந்திப்பதையும் தான் அழைப்புப் பணி என புரிந்து வைத்திருக்கின்றார்கள். 

அஹ்மத் தீதாத், டாக்டர் ஜாகிர் நாயக் போன்றோரால் கவரப்பட்டு சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த சகோதரர்களோடு விவாதம் புரிவதையும் அவர்களின் மதங்களின் எதிர்மறையான அம்சங்களை எடுப்பாக எடுத்துரைத்து இஸ்லாத்தின் உயர்வான போதனைகளை சொல்கின்ற போக்கும் அதிகரித்து வருகின்றது. 

இது தொடர்பாக பல்லாண்டுகளுக்கு முன்பு ஜமாஅத்தின் ஒன்றியத் தலைமையகத்தில் நடந்த சுவையான நிகழ்வு ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

 மத்திய தலைமையகம் பழைய தில்லியில் சித்லி கப்ர் பகுதியில் இயங்கி வந்த காலம் அது. அமீரே ஜமாஅத்தாக மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி இருந்தார். உலகப் புகழ்பெற்ற மார்க்க அறிஞர் அலீ அல்ஹர்கான் வந்திருந்தார். இன்னும் சில தலைவர்களும் உடன் இருந்தார்கள். 

ஜமாஅத் செய்து வருகின்ற பணிகள் குறித்து அவருக்கு முன்னால் எடுத்துச் சொல்லப்பட்டது. பல்வேறு மொழிகளில் ஜமாஅத் வெளியிட்ட குர்ஆன் மொழிபெயர்ப்புகள், மற்ற அறிமுக இலக்கியங்கள் எல்லாம் அவருக்கு முன்னால் காண்பிக்கப்பட்டது. 

எல்லாவற்றையும் பார்த்த பிறகு அறிஞர் அலீ அல்ஹர்கான் அவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்து இன்றும் பின்பற்றத்தக்கதாய் மிளிர்கின்றது. அவர் சொன்னார்: 

‘இந்த நாட்டில் நீங்கள் இந்தப் பணிகள் அனைத்தையும் செய்யுங்கள். ஆனால் ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்திருங்கள். மக்கள் நீங்கள் கொடுக்கின்ற குர்ஆன் மொழிபெயர்ப்புகளை, எளிய மொழியில் எழுதப்பட்ட அழகான அறிமுக புத்தகங்களை வாசிக்கின்றார்களோ, இல்லையோ, ஒன்று மட்டும் உறுதி. அவர்கள் நிச்சயமாக உங்களை வாசிப்பார்கள். உங்களின் வாழ்க்கைப் புத்தகத்தை அவசியம் வாசிப்பார்கள். எனவே உங்களின் வாழ்வை இஸ்லாத்தின் அச்சில் வார்த்தெடுப்பதில் அதிகக் கவனம் செலுத்துங்கள்.’ 

நம்முடைய நடத்தையும் பேச்சும் செயலும்தாம் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுதான் உண்மை. விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கு உறுதுணையாக மட்டும்தான் நூல்கள் இருக்கும். கேரளத்து கடற்கரையில் இறங்கிய அழைப்பாளர்கள் எந்தவொரு புத்தகத்தையும் தம்முடன் கொண்டு வரவில்லை. மக்கள் அவர்களின் வாழ்க்கை எனும் புத்தகத்தைப் பார்த்துதான் இஸ்லாத்தை அறிந்துகொண்டார்கள். இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டார்கள். 

சொல்லாலும் சாத்தியம் இல்லாததை எழுத்தாலும் சாத்தியம் இல்லாததை

மனிதனின் நடத்தையின் வலிமை சாதித்துவிடுகின்றது.

என்றார் ஒரு உர்தூ கவிஞர். 


- ஹெச். அப்துர் ரகீப்

Friday, February 23, 2018

கண்ணியத்தை மீட்டெடுப்போம். எதிர்காலத்தை வடிவமைப்போம்.



பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து நாட்டின் மூலை முடுக்குளிலிருந்து இங்கு திரண்டிருக்கும் இஸ்லாமிய இளைஞர்களே!

இந்த மாபெரும் திடலில் திரண்டிருக்கின்ற இந்த இளைஞர் கூட்டத்தை நான் எழுபது, எண்பது ஆண்டுகளுக்கு முன்பாக இந்தத் துணைக்கண்டத்தில் எழுந்த முழக்கத்தின் அறுவடையாகப் பார்க்கின்றேன். இஸ்லாத்தை உயிரோட்டமுள்ள வாழ்க்கை நெறியாக முன் வைத்த அந்த முழக்கம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தூங்கிக் கிடந்த முஸ்லிம் உம்மத்தை எழுப்பியது. சோம்பிக் கிடந்த முஸ்லிம் சமுதாயத்தை சிலிர்த்தெழச் செய்தது. இதன் தொடர் விளைவாக இன்று இஸ்லாம் இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத சித்தாந்த வல்லரசாக - Idealogical super power - ஆக நிமிர்ந்து நிற்கின்றது.

இன்று உலகம் மிக வேகமாக இஸ்லாம் முன் வைக்கின்ற மாண்புகளையும் நெறிமுறைகளையும் ஏற்றுக்கொண்டு வருகின்றது. அசத்திய சக்திகள் இஸ்லாத்துக்கு எதிரான மிகப் பெரும் அளவில் அவதூறு பரப்புரையை முடுக்கிவிடப்பட்டுள்ளன. உலகத்தின் அசத்திய சக்திகள் அனைத்தும் இதற்கான கடைசி முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

என்றாலும் இஸ்லாம் ஒரு மாற்றாக மேலெழுந்து நிற்கின்றது. நவீன உலகின் சிக்கல்களைத் தீர்க்கின்ற தீர்வாக உயர்ந்து நிற்கின்றது. இஸ்லாம் ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிர்பார்ப்பின் மையமாக - இன்னும் சொல்லப்போனால் ஒற்றை மையமாக - மேலோங்கிக் கொண்டிருக்கின்றது.

அன்பர்களே!
இந்த மூன்று நாள் மாநாட்டில் நாட்டின் ஏராளமான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும். நம்முடைய இயக்கத் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், தேச அறிவுஜீவிகள், தலைவர் ஆகிய பலரும் உங்களுக்கு முன்னால் நாட்டைச் சூழ்ந்துள்ள பிரச்னைகள் குறித்துச் சொல்வார்கள். இந்த நாட்டில் வறுமை எந்த அளவுக்கு வேகமாக கூடிக் கொண்டிருக்கின்றது என்பதையும் பொருளாதார ஏற்றத்தாழ்வு நாளுக்கு நாள் விரிவடைந்துகொண்டே போகின்ற அவலத்தையும் நாட்டின் செல்வவளம் அனைத்தும் ஒரு சிலரின் கைகளில் குவிந்து கொண்டிருக்கின்ற போக்கையும் அவர்கள் சுட்டிக்காட்டுவார்கள். இனம், சாதி, மொழி, வட்டாரம் ஆகியவற்றின் பெயரில் அரங்கேறிக் கொண்டிருக்கின்ற கொடுமைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள், தலித்கள், பெண்கள் போன்றோர் மீதான அக்கிரமங்கள் குறித்தெல்லாம் இங்கு பேசப்படும். இன்று காலையில் கூட நாளிதழ்களில் அந்தக் கொடுமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உத்திரப் பிரதேசத்தில் இளம் பெண் ஒருத்தியை உயிரோடு கொளுத்திக் கொன்ற கொடூரத்தை வாசித்திருப்பீர்கள்.

அன்பர்களே! இந்த அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்படும். ஆனாலும் தோழர்களே! நம்முடைய பணி பிரச்னைகள் குறித்து ஒப்பாரி வைப்பதல்ல. பிரச்னைகளைப் பற்றிப் பேசிக் கலைவதும் நம்முடைய வேலை கிடையாது.

இந்த மாநாட்டின் மையக் கருத்துதான் இந்த மாநாட்டின் உண்மையான செய்தியாகும்.  Reclaiming Dignity. Redesigning Future. கண்ணியத்தை மீட்டெடுப்போம். எதிர்காலத்தை வடிவமைப்போம். ஆம். நாம் இங்கே நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்போம். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை வடிவமைப்போம். அதனை வடிவமைப்பதற்கான பணியில் நம்மை நாமே அர்ப்பணித்துக்கொள்வோம் என்கிற உறுதியுடன்தான் நாம் இங்கே கூடியிருக்கின்றோம்.

அன்பர்களே! மாற்றத்தைக் கொண்டு வருவதில் இரண்டு காரணிகள் பெரும் பங்காற்றுவதாக சமூகவியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஒன்று உந்தித் தள்ளுகின்ற அதிருப்தியுணர்வு Push of discomfort அதாவது நாட்டின் தற்போதைய அவலங்கள், அக்கிரமங்கள், கொடுமைகள், உரிமை மீறல்கள், ஊழல்கள் போன்றவற்றைப் பற்றிய அதிருப்தியும் கவலையும் உந்தித் தள்ளுகின்ற வகையில் மனத்தை நிறைக்க வேண்டும். இது மட்டும் போதாது. மேலே இழுக்கின்ற நம்பிக்கையுணர்வு Pull of Hope.. அதாவது இன்று உலகத்தில் நடந்துகொண்டிருப்பவை அனைத்தும் நிலையானவை அல்ல. ஒரு சிறப்பான, அழகான, நிறைவான உலகத்தைக் கட்டமைக்க முடியும். அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்கிற நம்பிக்கை.  இந்த இரண்டும்தாம் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற வல்லமையும் திறனும் கொண்டவை என சமூகவியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

எனவே, தோழர்களே, இந்த மாநாட்டிலிருந்து நீங்கள் திரும்புகின்ற போது இந்த இரண்டையும் உங்களுடன் கொண்டு செல்லுங்கள். தற்போதைய நடப்புகள் பற்றிய கவலையையும் அதிருப்தியையும் கொண்டு செல்லுங்கள். அதே சமயம் ஒளிமயமான, அழகான, சிறப்பான எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான சாத்தியம் பற்றிய நம்பிக்கையையும் ஆசையையும் உறுதியையும் செயல்பட்டாக வேண்டும் என உந்தித் தள்ளுகின்ற நம்பிக்கையுணர்வையும் கொண்டு செல்லுங்கள்.
அன்பர்களே! எஸ்.ஐ.ஓ ஒரு ரியாக்டிவ் இயக்கம் கிடையாது. எதிர் வினையாற்றுகின்ற இயக்கம் கிடையாது. இது ஒரு பிரோ ஆக்டிவ் இயக்கம் ஆகும். இது தாமாக முன் வந்து, தெளிவான இலக்குகளை முன் வைத்து அவற்றை அடைவதற்காக திட்டமிட்ட, திட்டவட்டமான, தீர்க்கமான முறையில் பணியாற்றுகின்ற இயக்கம்தான் எஸ்.ஐ.ஓ.

எதிர்வினையாற்றுகின்ற இயக்கம் எப்படி இயங்கும்? ரியாக்டிவ் என்பது என்ன, பிரோ ஆக்டிவ் என்பது என்ன போன்றவற்றையெல்லாம் நீங்கள் எல்லோரும் நல்ல முறையில் அறிந்திருக்கின்றீர்கள். எதிர் வினையாற்றுகின்ற போது நம்முடைய நிலைமை என்னவாக மாறிவிடுகின்றது? நம்முடைய செயல்திட்டமும், நம்முடைய செயல்பாடுகமும் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை. அதற்கு மாறாக மற்றவர்கள் தீர்மானிக்கின்றார்கள். அந்நிய சக்திகள் அவற்றைத் தீர்மானிக்கின்றார்கள். இதுதான் எதிர்வினையாற்றுகின்ற இயக்கம் ஆகும்.

இதற்கு எடுத்துக்காட்டாக புதியதாக நீச்சலைக் கற்றுக்கொள்ள முனைந்திருக்கும் இளைஞனைச் சொல்லலாம். பயமும் அச்சமும்தாம் அவனை ஆட்டிப்படைக்கின்றன. ஆர்ப்பரித்து வருகின்ற ஒவ்வொரு அலையும் அவனை இங்கும் அங்கும் புரட்டிப் போடுகின்றன. அலைகளின் ஆளுகைக்குள் அவன் வசமாகச் சிக்கிக் கொள்கின்றான். ஒவ்வொரு அலையும் அவனை எதிர்பாரா நிலையில் பற்றிக்கொள்கின்றன. சில சமயம் இந்தப் பக்கமும் சில சமயம் அந்தப் பக்கமும் அவன் அலைக்கழிக்கப்படுகின்றான். திடீரெனத் தாக்குகின்ற அலைகளினால் மலைப்பும் அயர்வுக்கும் திகைப்புக்கும் அவன் ஆளாகிவிடுகின்றான். கைகளையும் கால்களையும் ஆட்டுகின்றான். ஒவ்வொரு அலையையும் தனித்தனியாக எதிர்கொள்கின்றான். அலைகளை வெல்வதுதான் அவனுக்கு மிகப் பெரும் கவலையாகிவிடுகின்றது. இதுதான் எதிர்வினையாற்றுகின்ற உளவியல். எந்தச் சமூகங்கள் இந்த உளவியலைக் கொண்டிருக்கின்றனவோ அவற்றால் ஒருபோதும் வெற்றி பெறவே இயலாது.

இன்று பிரச்னைகளும் நெருக்கடிகளும் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆபத்துகளும் அச்சுறுத்தல்களும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. நம்முடைய ஷரீஅத்தும் மிகப் பெரும் ஆபத்தைச் சூழ்ந்திருக்கின்றது என்பதும் ஏராளமான தடைகள் இந்தச் சமுதாயத்தைக் கட்டிப் போட்டிருக்கின்றன என்பதும் உண்மையே. ஆனால் நம்முடைய வேலை இந்த அலைகளை வென்றெடுப்பது மட்டுமே அல்ல. நம்முடைய பணி இந்த அலைகளைச் சமாளிப்பதிலேயே வாழ்நாளைக் கழித்து விடுவதல்ல. அதற்கு மாறாக நாம் தேர்ந்த, வல்லமை நிறைந்த நீச்சல் வீரரைப் போன்றதாகவே இருக்க வேண்டும். அவருடைய கவனமும் ஈடுபாடும் மொத்தமும் தாம் எடுத்துக்கொண்ட இலக்கைச் சென்றடைவதில்தாம் குவிந்திருக்கும். அவரும் அலைகளுடன் போரிடத்தான் செய்கின்றார். என்றாலும் அவர் அலைகளுடன் போரிடுவதோடு இலக்கை நோக்கி நீந்தி முன்னேறிச் செல்வதில் தம்முடைய திறமை முழுவதையும் குவித்துவிடுகின்றார்.

உங்களுக்கு முன்னாலும் தெளிவான இலக்குகள் இருக்கின்றன. உங்களுக்கு முன்னாலும் தீர்க்கமான இலட்சியங்கள் இருக்கின்றன. இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகன் வரையில் இறைவனின் செய்தியை எடுத்துரைக்க வேண்டிய பெரும் பணி உங்கள் முன்னால் இருக்கின்றது. ஒவ்வொரு மனிதரின் இதயக் கதவுகளையும் நீங்கள் தட்ட வேண்டியிருக்கின்றது. மக்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ள வேண்டியிருக்கின்றது. இதுதான் உங்களுக்கு முன்னால் இருக்கின்ற இலக்கு. இதுதான் நீங்கள் அடைய வேண்டிய இலட்சியம். இங்கு சமுதாயமும் தேசமும் எதிர்கொண்டிருக்கின்ற பிரச்னைகளிலும் நீங்கள் அவசியம் கவனம் செலுத்துங்கள். உரிமைக் குரல் எழுப்புங்கள். என்றாலும் உண்மையான இலக்கை என்றும் எந்தச் சந்தர்ப்பத்திலும் மறந்துவிடாதீர்கள். ரீடிசைனிங் ஃபியூச்சர் - எதிர்காலத்தை வடிவமைக்கின்ற பணியை மறந்துவிடாதீர்கள். நாம் ஏற்றுக்கொண்டுள்ள இலக்கை வென்றடைய வேண்டும் என்பதை நெஞ்சங்களில் பசுமையாக வைத்துக்கொண்டு முன்னேறிச் செல்லுங்கள்.

Tuesday, August 8, 2017

ஷேக் தாவூத்கள் பெருகட்டும்..!



தமிழகத்தின் மையப் பகுதியில் இருக்கின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான திருச்சிராப்பள்ளியில் கடந்து நாற்பதாண்டுகளாய் இஸ்லாமிய இயக்கப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. சமரசம் இதழின் முன்னாள் ஆசிரியரும் முன்னாள் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினருமான அப்துல் ஹன்னான் சாகிப், தமிழக ஜமாஅத்தின் முன்னாள் துணைத் தலைவரும் குர்ஆன் மொழிபெயர்ப்பாளருமான மௌலவி ஏ குத்புத்தீன் அஹ்மத் பாகவி ஆகியோர்தாம் இந்த நகரத்தில் இயக்கம் வேரூன்ற களம் அமைத்துத் தந்த முன்னோடிகள். அதிலும் குறிப்பாக மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி நகரத்து இளைஞர்கள் மத்தியில் பணியாற்றுவதில் தீவிர ஈடுபாடும் அக்கறையும் செலுத்தி வந்தார். இவ்வாறு மௌலானாவால் பட்டை தீட்டப்பட்ட வைரங்களாய் ஜொலித்தவர்கள் சகோதரர் ஷேக் தாவூத், சகோதரர் டி. ஈ. நாசர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

சகோதரர் ஷேக் தாவூத் 21 ஜூலை வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் இறந்துவிட்டார். ஷேக் தாவூத் அவர்களுக்கு இது இரண்டாவது அறுவை சிகிச்சை ஆகும். மருத்துவமனைக்குப் போவதற்கு முன்னால் ஜமாஅத் அலுவலகம் வந்து அனைவரையும் சந்தித்து, சிரித்துப் பேசி, பிரியாவிடை பெற்று வந்தார் அவர்.

அவருடைய மறைவு குறித்து இரங்கலைத் தெரிவித்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் துணைத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி எழுதுகின்றார் : ‘அருமைச் சகோதரர் ஷேக் தாவூத் பாய் இறைவனிடம் மீண்டுவிட்டார் என்கிற செய்தி இன்று காலை இடியாய் என்னைத் தாக்கியது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன். நான் இதனை இஸ்லாமிய இயக்கத்தின் மௌன உழைப்பாளிகளில் ஒருவரின் மரணமாக, அவ்வளவாகப் பேசப்படாத அப்பழுக்கில்லாத, உளத்தூய்மை நிறைந்த செயல் வீரரின் மரணமாகப் பார்க்கவில்லை. அதற்கு மாறாக இஸ்லாமிய இயக்கத்துக்காக விலைமதிப்பு மிக்க இரத்தினங்களையும் வைரங்களையும் உற்பத்தி செய்துகொண்டிருந்த தொழிற்சாலை ஒன்று இழுத்து மூடப்பட்டதாகவே பார்க்கின்றேன்.

தமிழ்நாட்டில் திருச்சி மாநகரில் வாழ்ந்து வந்தவர்தாம் ஷேக் தாவூத். அவர் மெத்தப் படித்த படிப்பாளி அல்லர். அலட்டிக் கொள்ளாத, ஆரவாரம் இல்லாத இயக்க ஊழியராகத்தான் அவர் இருந்தார். எஸ்.ஐ.ஓவிலிருந்து ஒய்வு பெற்ற போது அந்ந்தச் சந்தர்ப்பத்தில் திருச்சியில் ஜமாஅத்தும் முழுமையாக நிறுவப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் திருச்சியில் மிகவும் பின்தங்கிய வறுமையும் ஏழ்மையும் நிறைந்த பகுதியில் அவர் தம்முடைய பணியைத் தொடங்கினார். குடிசைகளில் வசித்து வந்த, கைவண்டிகளில் வணிகம் செய்து வந்த ஏழை எளிய மக்களின் பிள்ளைகளை இலக்காக்கி பாலர் சங்கத்தை உருவாக்கி பணியாற்றத் தொடங்கினார், அவர். அந்தப் பிள்ளைகளிடம் அவர் எந்த அளவுக்கு அளப்பரிய பாசத்தையும் அன்பையும் கொட்டினார் எனில் அவர்கள் அவரின் அன்புக்கு அடிமை ஆகிவிட்டார்கள். ஷேக் சாகிபும் அந்தப் பிள்ளைகளின் கல்விக்கான ஏற்பாடுகளைச் செய்தார். கல்விச் செலவுகளை ஏற்றுக்கொண்டார். மேலும் மார்க்கக் கல்வியையும் விழிப்பு உணர்வையும்கக ஊட்டிவிட்டு அந்த இளவல்களின் இதயங்களில் இஸ்லாமிய உணர்வுகளை மீட்டெடுத்தார்.

நான் எஸ்.ஐ.ஓவின் அகில இந்தியத் தலைவராகப் பொறுப்பேற்ற போது திருச்சிக்கு முதல் முறையாகச் சென்றேன். அந்தச் சந்தர்ப்பத்தில் திருச்சியில் ஷேக் சாகிப் நடத்தி வந்த அற்புதத்தைக் கண்ணாரக் கண்டேன். ஏட்டறிவோ, பட்டறிவோ இல்லாத ஏழை பெற்றோரின் பிள்ளைகள் - அவருடைய சீடர்கள் - அப்போது முதுகலைப் பட்டப் படிப்பும், பொறியியலும் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் திருச்சி எஸ்.ஐ.ஓவை வெற்றிச் சிகரங்களில் ஏற்றி அமர்த்தி விட்டிருந்தார்கள். அவர்கள் அப்போது அங்கு செய்து வந்த பணிகளைப் பார்த்து விட்டு தில்லி திரும்பிய நான் ரஃபீக் மன்ஜில் இதழில் ‘இந்தியத் திருநாட்டின் முன்மாதிரி கிளையாக திருச்சி கிளை’ என்கிற தலைப்பில் அனைத்தையும் விரிவாக எழுதினேன். (இதன் மொழிபெயர்ப்பு சமரசத்திலும் வெளியானது)

இன்றைய நிலைமை என்னவெனில் ஷேக் தாவூத் பாயின் அந்தத் தொழிற்சாலையிலிருந்து ஒரு டஜனுக்கும் அதிகமான பிஹெச்டி பட்டம் பெற்ற முனைவர்கள் வெளியாகிவிட்டிருக்கின்றார்கள். முதுகலைப் பட்டதாரிகள், பொறியியல் வல்லுநர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுச் சொல்வதும் சிரமமே. இவர்கள் அனைவருமே முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர். இவர்களில் சிலர் அமெரிக்கா, அய்ரோப்பா போன்றவற்றின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பும் படித்து முடித்திருக்கின்றார்கள். எல்லோருமே தத்தமது இடங்களில் இஸ்லாமிய இயக்கத்தின் முதன்மை இலட்சியப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தியவாறு சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றார்கள். ஒரு சாமானியராகத் தோற்றம் தருகின்ற இந்த ஒற்றை மனிதரின் தொலைநோக்கும் உயிரைக் கொடுத்துப் பணியாற்றும் வித்தையும் இன்று எத்தகைய அற்புதத்தை நிகழ்த்தி இருக்கின்றது எனில், இன்று இஸ்லாமிய இயக்க வானில் ஒளி வீசுகின்ற தாரகைகளைக் கொண்ட ஒரு நட்சத்திர மண்டலத்தையே தவழ விட்டு சாதனை படைத்திருக்கின்றார், அவர். இன்னும் எத்தனையெத்தனை ஏழை, எளிய குடும்பங்களின் சித்திரத்தை அவர் மாற்றியமைத்துவிட்டிருக்கின்றார் என்பதை எளிதாகச் சொல்லி விட முடியாது. சமூகச் சூழல்கள் எப்படி மாறுகின்றன, ஏழ்மையிலிருந்தும் அறியாமையிலிருந்தும் மீண்டெழுந்து வளர்ச்சிப் பாதையில் குடும்பங்கள் எப்படி பயணிக்கின்றன என்பதை அறிந்துகொள்ள வேண்டுமா, திருச்சிராப்பள்ளியின் அந்தப் பின்தங்கிய முஹல்லாவுக்குச் சென்று பாருங்கள்.
எந்தவொரு மக்தபின் (பயிற்சிப் பாசறையின்) ஆசானும் உண்மையில் மனித ஆன்மாக்களைப் பண்படுத்தி வார்த்தெடுக்கின்ற தொழிற்சாலையாகத்தான் இருப்பார்.

இவ்வாறு மனித ஆன்மாக்களைப் பண்படுத்தி வார்த்தெடுக்கின்ற அழகான தொழிற்சாலையை நான் என்னுடைய வாழ்நாளில் ஷேக் பாயின் எளிமையும் இனிமையும் நிறைந்த அமர்வுகளில் கண்கூடாகப் பார்த்தேன். அவருடைய அவையும் அமர்வுகளும் எந்நேரமும் மாணவர்களாலும் இலட்சியக் கனலுடன் இயங்குகின்ற இளைஞர்களாலும்தாம் நிறைந்திருக்கும்.

எல்லாம் வல்ல இறைவன் ஷேக் பாயின் சேவைகளை ஏற்றுக்கொள்வானாக! டாக்டர் அஜீஸ், டாக்டர் இப்ராஹீம் மற்றும் அவர்களைப் போன்ற பிற சகோதரர்கள் ஆற்றுகின்ற சேவைகளை ஷேக் பாயின் கணக்கில் ஸதகாயே ஜாரியாவாக - நிலையாக நன்மைகளைத் தந்துகொண்டே இருப்பவையாய் ஆக்குவானாக!’

எஸ்.ஐ.ஓவின் முன்னாள் அகில இந்தியத் தலைவர் ஜமாஅத்தின் மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினருமான எஸ். அமீனுல் ஹஸன் எழுதுகின்றார்:  ‘சகோதரர் ஷேக் தாவூத் அவர்களின் திடீர் மரணத்தால் நான் பெரிதும் மனம் உடைந்து நிற்கின்றேன். இஸ்லாமிய இயக்கத்துக்காக அவர் ஆற்றிய சேவைகளை எந்த வகையிலும் புறக்கணித்துவிட முடியாது. தாம் செய்த சேவைகளால் மன நிறைவு பெற்ற நிலையிலேயே அவருடைய ஆன்மா இந்த தற்காலிக உலகத்திலிருந்து விடை பெற்றிருக்கும். அவர் சமூகத்தில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த குடும்பத்துப் பிள்ளைகளைத் தத்தெடுத்துக் கொண்டார். அவர்களை வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கினார். அந்த இளவல்களுக்கு எந்த அளவுக்குப் பயிற்சியையும் சிந்தனைத் தெளிவையும் உயர்ந்த இலட்சியத்தையும் ஊட்டிவிட்டார் எனில் அவர்கள் வளர்ந்து கிளை பரப்பி நிழல் தருகின்ற விருட்சங்களாய் ஓங்கி நின்றார்கள். மற்றவர்களையும் தாங்கிப் பிடிப்பவர்களாய் மலர்ந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அந்த இளவல்கள் இஸ்லாமியத் துடிப்பும் இலட்சியக் கனலும் நிறைந்தவர்களாய் மிளிர்ந்தார்கள். இவர்கள் அனைவருமே தத்தமது குடும்பங்களில் முதல் முறையாக பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் காலடி எடுத்து வைத்த முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர். என்னுடைய கணிப்பின்படி அவரால் பயிற்றுவிக்கப்பட்ட பதினைந்து முனைவர்களும் (பிஹெச்டி பட்டம் பெற்றவர்கள்), ஐம்பதுக்கும் அதிகமான முதுகலைப் பட்டதாரிகளும் இன்று மிக உயர்ந்த பதவிகளிலும் பொறுப்புகளில் இருக்கின்றார்கள்’.

எஸ்.ஐ.ஓவின் முன்னாள் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஐ. கரீமுல்லாஹ் எழுதுகையில், ‘என்ன செய்ய வேண்டும், எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதில் மர்ஹூம் ஷேக் தாவூத் பாய் மிகத் தெளிவாக இருந்தார். உலகக் கல்வியில் வல்லமையும் மார்க்கப்பற்றும் இஸ்லாமியத் தெளிவும் ஒழுக்கத் தூய்மையும் நிறைந்த இளவல்களைக் கொண்ட டீம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். அதனை அவர் வெற்றிகரமாகச் செய்து முடித்தார். இதற்காக அவர் தம்முடைய வாழ்வின் வளங்கள் அனைத்தையும் முழுமையாக அர்ப்பணித்துவிட்டார். திருச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமியின் மாநாடு நடத்தப்பட்ட போது மாநாட்டின் துணை அமைப்பாளராக இருந்த ஷேக் தாவூத் வெளிப்படுத்திய செயல்திறனும் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தியாகமும் ஈடுஇணையற்றதாகும்’ என்று நினைவு கூர்ந்திருக்கின்றார்.

மர்ஹூம் அவர்களின் இறுதித் தொழுகையில் மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டார்கள். கண்களை கண்ணீர் மறைக்க அவரை நல்லடக்கம் செய்தார்கள். அந்த இரவுப் பொழுதில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்ட தருணத்தில் குல்லியத்துல் ஸலாம் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மௌலவி நூஹ் மஹ்லரி உருக்கமாக ஆற்றிய உரையில், ‘ஏழாண்டுகளுக்கு முன்பு இதே திருச்சியில் அரபிக் கல்லூரி ஒன்றை நிறுவி வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று ஷேக் பாய் கனவு கண்டார். அத்துடன் நின்றுவிடவில்லை. அல்லும் பகலும் பாடுபட்டு, கண் துஞ்சாமல் பசி நோக்காமல் உழைத்து அரபிக் கல்லூரியின் வெற்றியைக் கண்ணாரக் கண்டே விடைபெற்றிருக்கின்றார். அல்லாஹ் அவருடைய சேவைகளை ஏற்றுக்கொள்வானாக. இந்தக் கல்லூரியில் எத்தனை எத்தனை ஆயிரம் மாணவர்கள் பயின்று வெளிவந்தாலும் அந்த நன்மைகளில் ஒரு பகுதி ஷேக் பாய்க்கு ஸதகாயே ஜாரியாவாக தொடர்ந்து சேர்ந்துகொண்டே இருக்கும்’ என்றார்.

தமிழகத்தின் அனைத்து ஊர்கள்தோறும் இயக்கத்துக்கு ஷேக் தாவூத்கள் போன்ற உளத்தூய்மையும் கடின உழைப்பும் இறைநம்பிக்கை நிறைந்த ஆண்மக்கள் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் இதே போன்ற மாற்றங்கள் மலர வேண்டும். அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன்.

- ஹெச் அப்துர் ரகீப்

முன்னாள் மாநிலத் தலைவர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகம். 

Friday, January 22, 2016

சாதிய அமைப்பு குறித்து மௌலானா மௌதூதி(ரஹ்)



இந்தியாவின் இன்றைய சமூகக் கட்டமைப்பு எண்ணற்ற அடுக்குகளைக் கொண்டதாய்க் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த சமூக அடுக்குகளும் எத்தகையதாய் அடுக்கப்பட்டிருக்கின்றனவெனில் இவற்றில் சில சமூகக் குழுக்கள் மேலோங்கி நிற்கின்றனர். வேறு சில சமூகக் குழுக்களோ அவர்களுக்கு அடங்கியவர்களாய் இருக்கின்றனர். இந்த சமூகப் பிரிவுகளுக்கு இடையில் பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு நிறுவனமயமாக்கப்பட்டிருக்கின்றது. பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு பற்றிய இந்தக் கருத்தோட்டம் மிக மிக ஆழமாக வேரூன்றியுள்ளது.

அதற்கும் மேலாக ‘மறுபிறப்பு’ பற்றிய தத்துவம் இந்த நம்பிக்கையை இன்னும் அதிகமாக வலுவூட்டியிருக்கின்றது. சமூகக் கட்டமைப்பில் கீழ் அடுக்குகளில் முடக்கப்பட்டவர்களிடம் ‘தாம் அடங்கியிருப்பதற்கே படைக்கப்பட்டவர்கள்; முற்பிறவியில் தாம் செய்த தீவினைகளின் தவிர்க்க முடியாத விளைவுதான் இது; எனவே இதனை எந்த நிலையிலும் சகித்துக்கொண்டே ஆக வேண்டும்; இந்த நிலையை மாற்றிவிட முயல்வது வீண்’ என்கிற அடிமை சிந்தனை ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளது.

ஆதிக்க சமுதாயத்தரிடமோ, ‘தாம் பிறந்ததே இந்த அடிமைகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காகத்தாம். உயர்வும், சிறப்பும் தமக்கு மட்டுமே உரித்தானவை. முந்தைய பிறவியில் தாம் செய்த நற்கருமங்களின் காரணத்தினால்தான் தங்களுக்கு இந்தச் சிறப்பும் உயர்வும் கிடைத்திருக்கின்றன; இவற்றை மாற்றவோ, திருத்தவோ முற்படுவது இறைச்சட்டங்களுக்கு எதிரானது ஆகும்’ என்கிற நம்பிக்கை அழுத்தமாகப் பதியப்பட்டிருக்கின்றது.

இவ்வாறாக, இந்த சமூகக் கட்டமைப்பில் உயர் அடுக்கில் இருக்கின்ற ஒவ்வொரு சமூகத்தாரும் கீழ் அடுக்கில் இருக்கின்ற சமூகத்தாரின் தலைமீது கால் வைத்தவாறு நின்றுக்கொண்டும் அதனைத் தேய்த்து நசுக்கிக் கொண்டும் இருக்கின்றார்கள். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பற்றிய இந்தச் சிந்தனையும் பாகுபாடுகளும் சமூகத்தின் அனைத்து பரிமாணங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. கால் வைக்கின்ற இடங்களில் எல்லாம் அநீதியும் அக்கிரமும் கணக்குவழக்கின்றிக் காணப்படுகின்றன. நாகரிகத்தின் ஒவ்வொரு இண்டு இடுக்குகளிலும்கூட ஏற்றத்தாழ்வு கடைப்பிடிக்கப்படுகின்றது. உணவு உண்ணும் போதும் சரி, நீர் அருந்தும்போதும் சரி, நடையுடை பாவனைகளிலும் சரி, திருமணம், மரணம் போன்ற சுகதுக்கத்துக்கான சந்தர்ப்பங்களிலும் சரி அன்றாட வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் இந்தப் பாகுபாடுகள் நிறைந்திருக்கின்றன. அதற்கும் மேலாக இந்தப் பாகுபாட்டின் அடிப்படையில் பிறரை இழிவுபடுத்துகின்ற, கேவலமாகக் கருதுகின்ற போக்கும் நிலை பெற்று விட்டுள்ளது.

இந்த இழிவான போக்கு எந்த அளவுக்கு முற்றிப் போய் விட்டிருக்கின்றது எனில் தாம் உடுத்துவதைப் போன்ற ஆடைகளையும், தாம் அணிவதைப் போன்ற அணிகலன்களையும் தாழ்ந்த சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் உடுத்துவதையோ, அணிவதையோ உயர் அடுக்கில் இருக்கின்ற சமுதாயத்தாரால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. சில நாள்களுக்கு முன்பு இராஜஸ்தானில் இதனைக் கண்கூடாகப் பார்த்தோம்.

அங்கு சம்மார் என்கிற கீழ்சாதியைச் சேர்ந்த மக்கள் போர் காரணமாக பணம் படைத்தவர்களாய் ஆகிவிட்டனர். அவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கும் சென்று பொருளீட்டி வந்துவிட்டிருந்தனர். இந்தச் செழிப்பான மக்கள் தங்களின் பெண்களுக்கு ஆடைகளையும் அணிகலன்களையும் அணிவித்து அழகு பார்த்தனர்.

இது ஜாட்களையும்(Jats) குஜ்ஜார்களையும்(Gujjars) உசுப்பிவிட்டது.

எங்களுடைய பெண்கள் அணிவதைப் போன்ற ஆடைகளையும் அணிகலன்களையும் இந்த சம்மார்கள் எப்படி தங்களின் பெண்களுக்கு அணிவிக்கலாம் என்று கொதித்தெழுந்து பெரும் ஆர்ப்பாட்டங்களைச் செய்துவிட்டார்கள்.

இத்தனைக்கும் இந்தக் குஜ்ஜார்களையும் ஜாட்களையும் இராஜ்புத்கள் என்கிற உயர் சாதியினர் இந்தக் காரணத்தைச் சொல்லியே கேவலப்படுத்தி வந்தார்கள் என்பது தனிக் கதை.

இராஜ்புத்களின் நடத்தை தருகின்ற கசப்பை அனுபவித்து வந்த நிலையிலும் இந்தக் குஜ்ஜார்களும் ஜாட்களும் சம்மார்களுடன் அதே போன்று நடந்துக்கொண்டார்கள். சமூகப் படிநிலைகளில் எங்களுக்கு இணையாக இந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி வந்து அமர்ந்து விடலாம் என இவர்கள் ஆத்திரப்பட்டார்கள்.

இவ்வாறாக, எந்த இழிநிலையிலிருந்து மேலே எழுந்துவிட அந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் விரும்பினார்களோ அதே இழிநிலையில் மீண்டும் அவர்களைத் தள்ளிவிடவே இவர்கள் ஒன்றுசேர்ந்து ஓங்கிக் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

பொருளாதாரக் கட்டமைப்பும் பெரும் அளவில் மேற்படி சமூகக் கட்டமைப்பின் வரிசைமுறையில்தான் நிறுவப்பட்டிருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் அந்தச் சமூகக் கட்டமைப்பின் கொடூரமான அம்சங்களைக் கூர்மைப்படுத்துவதும் விதத்தில்தாம் நவீன முதலாளித்துவத்தின் தனித்தன்மைகள் கூட்டுச் சேர்ந்துவிட்டுள்ளன.

தொன்மையான சித்தாந்தங்கள், மெய்யியல் பேசும் தத்துவங்கள் ஆகியவற்றின் துணையுடன் எந்தச் சமூகக் குழுக்கள் சமூகப் படிநிலைகளின் மேல் அடுக்குகளில் நிலையாகக் குடியமர்ந்து விட்டிருந்தனவோ அவர்கள் நாட்டின் நாகரிக வாழ்வில் உயர்ந்த சிறப்பிடங்களையும் மேன்மையையும் தமதாக்கியவாறு தம்முடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டதோடு நின்றுவிடவில்லை. அதற்கும் மேலாக, அதனுடன் நாட்டின் செல்வ வளங்கள், வசதி வாய்ப்புகள் ஆகியவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்டு அவற்றைத் தமதாக்கிக் கொண்டார்கள்; சமூகப் படிநிலைகளின் கீழ் அடுக்குகளில் இருப்பவர்களையோ மேல் அடுக்குகளில் இருக்கின்ற மக்களுக்குத் தொண்டூழியம் செய்தும் கூலி வேலை செய்தும் பிழைப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்கிற கேவலமான நிலைமையில் தள்ளிவிட்டார்கள்.

இந்தப் பொருளாதாரக் கட்டமைப்பில் ஏதிலிகள், பாட்டாளிகள் போன்றோர் மீது இழைக்கப்படுகின்ற அநியாயங்கள், அக்கிரமங்கள், உரிமைப் பறிப்புகள் போன்றவற்றைக் கணக்கிடுவதும் சிரமமானதே. அது மட்டுமல்ல மேல் அடுக்குகளில் வாழ்கின்ற மக்கள் தம்முடைய வட்டத்திற்குள்ளும் பல்வேறு விதமான அக்கிரங்களிலும் உரிமைப்பறிப்புகளிலும் கொடுமைகளிலும் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக செல்வச்செழிப்புமிக்கவர்களின் எண்ணிக்கை சுருங்கிக்கொண்டே போக, செல்வவளம் இல்லாமல் மோசமான நிலையில் வாழ்வை ஓட்டுகின்ற எளியவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போயிற்று.

இன்னும் சொல்லப்போனால் இவர்களிடம் நடைமுறையில் இருந்த வட்டிப் பணத்தை உண்ணுகின்ற பழக்கமும், குடும்பச் சொத்துகளைக் கூட்டாக நிர்வகிக்கின்ற கூட்டுக் குடும்ப வழிமுறையும் (Joint Family System) மூத்த மகனயே ஒட்டுமொத்த சொத்துக்கும் ஒரே வாரிசாக அறிவிக்கின்ற தலைப்பிள்ளைக்கான வாரிசு சட்டமும் (Law of Primogeniture) இன்னும் இவை போன்ற எண்ணற்ற பழக்கவழக்கங்களும் செல்வத்தையும் செல்வத்தை உண்டுபண்ணுகின்ற வழிவகைகளையும் ஒரு சிலரிடம் குவித்துவிடுபவையாயும், பெரும்பாலான மக்களுக்கு எத்தகைய வழிவகையையும் அளிக்காமல் தடுத்து மற்றவர்களைச் சார்ந்து வாழ வேண்டிய நிலைமைக்கு அவர்களைத் தள்ளிவிடுபவையாயும் இருக்கின்றன. இந்த நடைமுறைகளின் பயனாக எந்த மக்களிடம் செல்வவளம் குவிந்திருந்ததோ அவர்கள் இப்போது நவீன முதலாளித்துவ வழிமுறைகளை மேற்கொண்டு நாட்டின் தொழில், வணிகம், பொருளாதாரம் ஆகிய அனைத்தின் மீதும் தம்முடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டார்கள்; அந்த ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார்கள்.

இப்போது கட்டமைக்கப்படுகின்ற அரசியல் அமைப்பின் அடிப்படையான ஆவணத்தில் மக்களாட்சி, சமூக நீதி(Social Justice), சமத்துவம், எல்லாத் தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகள் (Equal Opportunities) போன்ற வானளாவியக் கருத்தோட்டங்கள் இம்மியளவுகூட அழுக்கு படியாத, மாசற்ற, மனத்தை மயக்குகின்ற சொற்களில் ஏட்டளவில் எழுதப்பட்டு வருகின்றன. இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.

ஆனால் இந்தக் கருத்தோட்டங்கள் அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்தப்படும்போதுதான் இவற்றுக்கு மதிப்பே தவிர, இந்த வெற்று வார்த்தைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது வெளிப்படை.

நடைமுறை வாழ்வில் நாம் அன்றாடம் பார்ப்பது என்ன?

இந்த அரசியல் அமைப்பை உருவாக்குதல், வடிவமைத்தல், கட்டமைத்தல், நடைமுறைப்படுத்தல் ஆகிய அனைத்துப் பணிகளிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பது யார்?

இன்றைய சமூக, பொருளாதாரக் கட்டமைப்பில் உயர்வான படிக்கட்டுகளில் வீற்றிருக்கின்ற - இல்லை பிறந்திருக்கின்ற சமூகக் குழுவினர்தாம் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இறைவன் இந்த சமூகக் குழுவினருக்கு அனைத்தையும் கொடுத்திருக்கின்றான். ஆனால் பெரிய மனத்தையும், விரிந்த பார்வையையும், அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற தீரத்தையும் ஏனோ இவர்களுக்குத் தரவே இல்லை. இவர்களின் குறுகிய மனப்பான்மை இன்று வரையிலும் இந்தியாவுக்கு மிகப் பெரும் இழப்புகளையே தந்து வந்துள்ளது. இவர்களின் இந்த வரலாற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கின்ற போது இவர்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தை நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுவதற்காகப் பயன்படுத்துவார்கள் என எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாது.

ஆக, கசப்பு உணர்வும் கொடுமைக்காளான வலிகளும் நிறைந்ததாய்த்தான் இன்றைய இந்த நிலைமைகள் இருக்கின்றன. இந்த வலியையும் துன்பத்தையும் நாட்டின் சாமான்ய மனிதர்கள் மிகக் கடுமையாக உணர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இது வரை இனவாத போதை இந்தக் கசப்புணர்வை பெரும் அளவில் கட்டுப்படுத்தி வைத்திருந்தது. நாட்டின் நிர்வாகம் நம்முடைய கைகளில் வந்துவிடுமேயானால் இந்த அநீதிகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்கிற நம்பிக்கையில்தான் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் நாட்டின் ஆட்சியதிகாரம் உண்மையிலேயே நாட்டு மக்கள் வசம் மாற்றப்படுகின்ற போது அந்த அதிகாரங்களைக் கொண்டு நாட்டில் சமூக நீதி உண்மையிலேயே நிலைநிறுத்துகின்ற பணியை மேற்கொள்வது எப்படி என்கிற அடிப்படைக் கேள்வி பேருருவம் எடுப்பதை நீண்டக்காலத்திற்குத் தள்ளிப் போட முடியாது.

இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற கடிவாளங்கள் இன்று எந்த மக்களிடம் கைமாறிக்கொண்டிருக்கின்றனவோ அவர்கள் இந்துக் கலாச்சாரத்தின் முந்தையப் பாரம்பர்யங்களை மேற்கத்திய, அய்ரோப்பிய, அமெரிக்க வாழ்க்கை முறையுடன் கோத்துவிடுகின்ற முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. என்னுடைய கணிப்பு சரியாக இருக்குமேயானால் இவர்கள் ஒரு வகையான போலி மக்களாட்சியையும், ஒரு மேம்போக்கான சமத்துவத்தையும், நீதியை நிலைநாட்டுவது போன்ற மாயத் தோற்றத்தையும் நிலைநிறுத்துவதில் திண்ணமாக வெற்றி பெற்றுவிடுவார்கள்.

ஆனால் அந்தப் போலியான தோற்றங்களுக்குப் பின்னால் வழக்கம்போல அதே அநீதிகளும், அதே வஞ்சகங்களும், அதே பாகுபாடுகளும், அதே பிரிவுகளும் இன்று இருக்கின்ற அதே சூட்டுடனும் தகிப்புடனும் நிலைத்து நிற்கும்.

ஏனெனில் பிறப்பின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கின்ற போக்கும், சமூகப் பாகுபாடுகளும் இந்துக் கலாச்சாரத்தின் இரத்த நாளங்களில் ஊறிப் போய்க் கிடக்கின்றவை ஆகும். அவை இரத்தத்தில் கலந்திருக்கின்ற நிலையில் உண்மையான மக்களாட்சியை நிலைநிறுத்துவது இயலாத காரியம் ஆகும். அதனுடன் மேற்கத்திய சித்தாந்தங்களைக் கோத்துவிடுவதால் மிதமிஞ்சி என்ன கிடைத்துவிடப் போகின்றது? மேல்தட்டு மக்களின் ஆதிக்கத்துக்கும் முதலாளித்துவ சுரண்டலுக்கும் தேர்தல்கள் மூலமாகவும் அவற்றில் பெறப்படுகின்ற வாக்குகள் மூலமாகவும் சட்டரீதியான அங்கீகாரமும் அதிகாரப்பூர்வமான அனுமதியும்தாம் கிடைத்துவிடும் என்பதைத் தவிர வேறு எந்தப் பயனும் கிடைத்துவிடப் போவதில்லை.

இதனால்தான் இவர்களின் இந்தச் செயல்பாடுகளின் விளைவாக இந்தியாவின் சாமான்ய மக்கள் சொற்பக் காலத்திலேயே நிராசைக்கும் விரக்திக்கும் ஆளாகிவிடுவார்கள் என்பது உறுதி. இந்த ஆளும் வர்க்கத்தினரால் நீதியை நிலைநாட்ட முடியாமல் போகும்போது விவசாயிகள், பாட்டாளிகள், தொழிலாளர்கள், மேல்தட்டு மக்களிலேயே வறிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் என ஒட்டுமொத்த இந்திய சாமான்ய மக்கள் அனைவரும் ஏதேனும் ஓர் நீதமிக்க மாற்று அமைப்புக்காக ஏங்கத் தொடங்கிவிடுவார்கள்; அதற்கான தேடலில் இறங்கிவிடுவார்கள். அந்த நிலை வருவதற்கு நீண்ட நேரமும் பிடிக்காது.

- 26, ஏப்ரல், 1947 சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமியின் தென்னிந்திய மாநாட்டில் அமீரே ஜமாஅத் மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி(ரஹ்) அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பேருரையிலிருந்து...

Thursday, January 14, 2016

மாறி வரும் உலக நிலைமைகளும் இஸ்லாமிய இயக்கமும்



உலகெங்கும் முஸ்லிம்கள் அனைவரும் இப்போது தங்களுடைய வரலாற்றின் மிக மிகக் கடினமான காலகட்டத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதில் ஐயம் இல்லை. ஒரு சில நாடுகளைத் தவிர ஒட்டுமொத்த முஸ்லிம் உலகமும் அடிமைப்பட்டிருந்த அவலத்தையும் இந்த முஸ்லிம் உம்மத் இதற்கு முன்பு சந்தித்திருக்கின்றது. அதில் இரு வேறு கருத்துகளுக்கு இடம் இல்லை.


என்றாலும் இன்று விடுதலை பெற்ற நாடுகளாகச் சொல்லிக் கொள்கின்ற நாடுகளில் வாழ்கின்றவர்களும் சரி, மற்ற நாடுகளில் வாழ்பவர்களானாலும் சரி, உலக முஸ்லிம்கள் எந்த அளவுக்கு அவமானத்துக்கும் கேவலத்துக்கும் ஆளாகி இருக்கின்றார்கள் எனில், உலகெங்கும் வாழ்கின்ற 150 கோடி முஸ்லிம்கள் தினம் தினம்  எந்த அளவுக்கு அவமானகரமான, கேவலமான, மனத்தை முள்ளாகத் தைக்கின்ற, கையாலாகாத தனத்தையும் இயலாமையையும் வெளிப்படுத்துகின்ற, நெஞ்சத்தை சுக்குநூறாக வெடிக்கச் செய்கின்ற செய்திகளுடன் கண் விழிக்கின்றார்கள் எனில் அதற்கு இணையான அவலத்துக்கும் கையறு நிலைக்கும் வரலாற்றில் இதற்கு முன்பு முஸ்லிம்கள் எந்தக் காலத்திலும் சந்தித்தது கிடையாது.

ஒட்டுமொத்த முஸ்லிம் உலகமும் வல்லரசு நாடுகளின் சூழ்ச்சிகளுக்கும் சதிகளுக்கும் இரையாகி அவற்றின் விளையாட்டுக்களமாய் மாறி நிற்கின்றது. இஸ்லாமிய நாடுகளில் மனித இரத்தம் தண்ணீராய்ப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கின்றது. இஸ்லாமிய இயக்கங்களைப் பொருத்த வரை அவை தம்முடைய வரலாற்றில் மிக மிகக் கடுமையான எதிர்ப்பையும் முட்டுக்கட்டைகளையும் சந்தித்து நிற்கின்றன. 
ஒரு பக்கம் அவர்களுக்கு எதிராக வல்லரசு நாடுகள் அனைத்தும் அணி திரண்டிருக்கின்றன.  மறுபக்கம் பெயர்தாங்கி முஸ்லிம் நாடுகளும் அவர்களை நசுக்கி அழித்து விடுவதற்கு தம்முடைய முழு வலிமையையும் பிரயோகித்து வருகின்றன. அதற்கும் மேலாக, ஊடகம், இணையதளம், ஆராய்ச்சி நிறுவனங்கள் என எண்ணற்ற அமைப்புகள் ஏராளமான வடிவங்களில் அவர்களுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புவதிலும், பொதுமக்களிடமிருந்து அவர்களைத் தனிமைப்படுத்துகின்ற முயற்சியிலும் மும்முரமாக இயங்கி வருகின்றன. இஸ்லாமிய சிஸ்டத்தை மட்டுமா இவர்கள் குறி வைத்திருக்கின்றார்கள்? அதற்கும் மேலாக இஸ்லாத்தின் அடிப்படை மாண்புகள், கோட்பாடுகள், கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிராகவும் அவதூறு பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இத்தகைய நிலைமைகள் குறித்து இன்று இரண்டு கோணங்களில் ஆய்வு செய்யப் போகின்றோம். ஒன்று, இது போன்ற நிலைமைகள் உருவானதற்கான காரணங்கள் என்ன? இரண்டு, இவற்றிலிருந்து மீண்டு எழுவதற்கான, இவற்றை வெற்றிகொள்வதற்கான பாதை எது?

நண்பர்களே!
இன்றைய வல்லரசுகளின் பார்வையில் இஸ்லாமிய நாடுகள் அசாதாரணமான முக்கியத்துவத்தைப் பெற்று இருக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதற்கு நான்கு பெரும் காரணங்களைச் சொல்லலாம். 1. மத்திய கிழக்கின் எண்ணெய் வளம். 2. இஸ்ரேலின் இருப்பும், அதன் பாதுகாப்பும். 3. புவியியல் ரீதியாக மையத்தில் இருப்பதால் இந்தப் பகுதிகளுக்கு இருக்கின்ற முக்கியத்துவம் 4. உலக முஸ்லிம்களின் மையமாக இந்தப் பிரதேசம் இருப்பது.
இந்த நான்குமே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நலன்கள் ஆழமான தொடர்பைக் கொண்டிருக்கின்றன.

அய்ரோப்பா மிக வேகமாக முதுமை அடைந்து வருகின்றது. இன்று அய்ரோப்பிய நாடுகளில் ஐவரில் ஒருவர் 65 வயதைக் கடந்தவராக இருக்கின்றார். அய்ரோப்பாவின் பொருளாதாரத்துக்கோ இளஇரத்தம் தேவைப்படுகிறது. இந்த இளைய சக்தி அதற்கு இஸ்லாமிய நாடுகளிடமிருந்துதான் கிடைக்கும்.
ஆனால், இந்த இஸ்லாமிய இளைய தலைமுறையினருடன் இஸ்லாமும் வந்து விடுமே என்கிற அச்சுறுத்தல் வேறு. இதனால் அய்ரோப்பா பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது. பொருõளாதாரச் செயல்பாடுகளைத் தக்க வைப்பதற்காக அவர்களுக்கு உழைக்கும் கரங்கள் தேவை. இதனால் அவர்களால் குடியேற்றத்தைத் தடுக்க முடியாது. ஆனால் இஸ்லாம் வந்து விடுமே என்கிற அச்சமோ அந்தக் குடியேற்றங்களை ஊக்குவிப்பதை விட்டு அவர்களைத் தடுக்கின்றது.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக ஒரு பக்கம் இளைஞர்களின் வருகையையும் குடியேற்றத்தையும் தொடர அனுமதித்தாலும் அந்த இளைஞர்களால் அய்ரோப்பிய மண்ணில் இஸ்லாமிய வாசம் வீசுவதைத் தடுத்துவிடுகின்ற வகையில் கொள்கைகளையும் சட்டங்களையும் வகுக்கின்ற குறுக்கு வழியை அய்ரோப்பியர்கள் கண்டுபிடித்தனர்.

இங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் பொருõளாதாரம் மிக வேகமாக முழுக்க முழுக்க சீனாவின் கடன்களைச் சார்ந்ததாய் ஆகிவருகின்றது. இந்தப் பொருளாதார அடிமைநிலையை முறிக்கின்ற ஒரே வழி சீனாவின் பொருளாதாரத்தையும் அமெரிக்காவைச் சார்ந்ததாய் ஆக்குவதுதான். இந்த நோக்கத்தை அடைய வேண்டுமெனில் ஒரு பக்கம் மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்கள் மற்றும் எண்ணெய்ப் பொருள்கள் செல்கின்ற பாதைகள் அனைத்தும் முழுக்க முழுக்க அமெரிக்கக் கட்டுப்பாட்டில் வந்து விட வேண்டும். மறுபக்கம் சீனப் பண்டங்கள், தயாரிப்புப் பொருள்கள் ஆகியவற்றின் போக்குவரத்து அதிகமாக இருக்கின்ற நெடுஞ்சாலைகள், நீர்ப் பாதைகள் - இவற்றில் பெரும்பாலானவை மத்தியக் கிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளில்தாம் இருக்கின்றன - அனைத்தும்கூட அமெரிக்காவின் ஏகபோகக் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட வேண்டும். போதாக் குறைக்கு இஸ்ரேலின் பாதுகாப்பிற்கும் மத்திய கிழக்கின் மீது அமெரிக்காவின் ஆதிக்கம் நிலைபெறுவது அவசியம் ஆகும்.

இவை போன்ற ஏராளமான காரணங்களைக் கருத்தில் கொண்டு மத்தியக் கிழக்கு நாடுகளிலும் இஸ்லாமிய நாடுகளிலும் டாலரைக் கொண்டு விலைக்கு வாங்க முடியாத மனிதர்கள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்றும் அதிகாரக் கேந்திரங்களைக் கைப்பற்றிவிடக் கூடாது என்றும் அவர்கள் விரும்புகின்றனர்.  அதே சமயம் மாறி வரும் உலகச் சூழல்களால் இந்த வட்டாரத்தைத் தம்முடையக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் குறிப்பாக மத்தியக் கிழக்கின் பெரும் பெரும் நாடுகளைத் தம்முடைய ஆளுகைக்குள் வைத்திருப்பதும் அவர்களுக்குப் பெரும் பாடாகி வருகின்றது. இந்த நிலையில் இதற்கு முன், முதல் உலகப் போருக்குப் பிறகு ஏகாதிபத்திய சக்திகள் தமது நலன்களைத் தக்க வைத்துக்கொள்கின்ற நோக்கத்துடன் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு வட்டாரத்திற்குள்ளும் குறுக்கும் öடுக்குமாகக் கோடுகள் கிழித்து வரைபடத்தையே மாற்றி அமைத்ததைப் போன்று இப்போது மீண்டும் நாடுகளையும் நாடுகளின் வரைபடங்களையும் மாற்றியமைக்க வேண்டிய தேவை வந்துவிட்டதாக அவர்கள் கணக்குப் போடுகின்றார்கள். அவர்களின் இந்தத் திட்டம் நிறைவேற வேண்டுமெனில் இந்த வட்டாரம் முழுவதிலும் மிகப் பெரும் அளவில் இரத்தக் களரியும் சமூகக் கொந்தளிப்பும் உள்நாட்டுப் போரும் வெடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கணக்குப் போட்டுள்ளார்கள். இது போன்ற மனித அவலம் அரங்கேறுவதை அவர்கள் constructive chaos ஆக்கப்பூர்வமான குழப்பம் என்றும் பெயர் சூட்டியிருக்கின்றார்கள். இவ்வாறாக constructive chaos  என்கிற இந்தக் கொள்கையின் அடிப்படையில் மத்தியக் கிழக்கு நாடுகளில் மிக மிகக் கடுமையான அளவில் இரத்தக்களரியும் குழப்பமும் கலவரமும் வெடிக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றார்கள்.

இந்த அரசியல், பொருளாதாரக் கணக்குகள், காரணங்கள் போன்றவற்றின் முக்கியத்துவம் ஒரு பக்கம் இருந்தாலும், மத்தியக் கிழக்கில் இந்த ஏகாதிபத்தியச் சக்திகளின் தலையீட்டுக்கான உண்மையான காரணம் இஸ்லாம்தான். இந்த இப்லீசிய - ஷைத்தானிய சக்திகள் அனைத்தும் தமக்கு எதிரான மிகப் பெரும் சக்தியாக இஸ்லாத்தைக் கண்டுதான் வெலவெலத்துப் போய் இருக்கின்றார்கள்.‘

அவர்கள் இஸ்லாத்தை மிகப் பெரும் ஆபத்தாக நினைத்து நடுங்குவதற்கான காரணம், இன்றையக் கொந்தளிப்பான நிலைமைகளிலும்கூட உலகம் முழுவதிலும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளிலும் மிக வேகமாக, அழுத்தமாக மக்களை ஈர்த்து வருகின்ற இஸ்லாத்தின் ஈர்ப்பாற்றல்தான். நவீன மேற்கத்திய உலகம் தூக்கிவைத்துக்கொண்டாடிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் நெறிக்கு மாற்றாக ஓங்கி நிற்கின்ற திறனும் வல்லமையும் இஸ்லாத்திற்கு மட்டுமே இருப்பதாலும் அவர்கள் அதனை ஒரு ஆபத்தாகப் பார்க்கின்றார்கள்.

இன்றையக் காலத்தில் மேற்கத்திய முதலாளித்துவப் பண்பாட்டுக்கு எந்த எதிர்காலமும் இல்லை என்பது சற்றொப்ப நிர்ணயமாகிவிட்டது. சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட இந்த சாம்ராஜ்யம் தன்னுடைய அடிப்படையான தத்துவங்களுடனும், தன்னுடைய அமைப்பின் நிறுவனக்கூறுகளுடனும் இப்போது தனது வீழ்ச்சியின் இறுதி அத்தியாயத்திற்குள் நுழைந்து விட்டது. நவீன மேற்கத்திய உலகிலோ இன்று உலகாயதக் கொள்கைகள் மீதான வெறுப்பும் சலிப்பும் உச்சத்தை எட்டிவிட்டுள்ளன. மதம், ஆன்மிகம், ஆன்மிக மாண்புகள் ஆகியவற்றின் பக்கம் மக்கள் மீண்டுக்கொண்டிருக்கின்றார்கள். அய்ரோப்பிய நாடுகள் எங்கும் அலையாக வீசிக்கொண்டிருக்கின்ற இந்த மீளலை மேற்கத்திய எழுத்தாளர்கள் Desecularisation என்றே அழைக்கின்றார்கள். கடிவாளம் இல்லாத உலக மோகமும், வரம்புகளையும் எல்லைகளையும் தாண்டி சக்திக்கும் மேலாகச் செலவிடுகின்ற இயல்பும், வட்டியும், வட்டியின் மீது வாங்கப்பட்ட கடன்களும் ஏற்படுத்தியிருக்கின்ற பேரழிவுகளால் அய்ரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருக்கின்ற ஒவ்வொரு சாமானியனும் கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளாய் மிக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கைகளைப் பிசைந்துக்கொண்டு நிற்கின்றான். இப்போது அவன் பொருளாதாரத்திற்கான மாற்று வழிமுறைகளைத் தேடத் தொடங்கியிருக்கின்றான். நவீன முதலாளித்துவ சிஸ்டத்தின் அநேகக் கூறுகளை மிகப் பெரும் ஊறு விளைவிப்பவையாயும் கேடு விளைவிப்பவையாயும் மேற்கத்திய உலகின் பெரும் பெரும் பொருõளாதார வல்லுநர்களே நினைக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒரு புதிய உலகளாவிய பொருõளாதார சிஸ்டத்தின் தேவையை - பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் A New Bretton woods -இன் அவசியத்தை அவர்கள் உணரத் தொடங்கி இருக்கின்றார்கள்.

குடும்ப மாண்புகள் காலில் போட்டு மிதிக்கப்படுகின்ற, குடும்பங்கள் சிதறிப் போகின்ற நோய் இன்று மேற்கத்திய உலகிலிருந்து கிளம்பி கிழக்கத்திய சமூகங்களிலும்கூட வேகமாகத் தொற்றிவிட்டுள்ளது. இப்போது குடும்ப மாண்புகளைக் கட்டிக் காக்கின்ற கடைசி கோட்டையாக இஸ்லாம் நிற்கின்றது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் குடும்ப அமைப்பு வலுப்பெறாத வரையில் நிலையான சமூகச் சூழலை ஏற்படுத்துவதற்கான சாத்தியமே இல்லை; நிம்மதி நிறைந்த தனிப்பட்ட வாழ்வுக்கும் வாய்ப்பே இல்லை. இந்த நிலையில் குடும்ப மாண்புகளைக் கட்டிக்காக்க வேண்டியதன் அவசியத்தை மேற்கத்திய உலகம் உணரத் தொடங்கியிருக்கின்றது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பொதுத் தேர்தல்களின் முக்கியமான விவாதப்பொருளாக குடும்ப மாண்புகளும் குடும்ப அமைப்பின் வலுவாக்கமும் ஆகி வருகின்றன. இன்னும் சொல்லப்போனால்க ஆஸ்திரேலியாவில் முதல் முன்னுரிமை குடும்பத்துக்கே என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்ட அரசியல்கட்சி (Family first Party) தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆன்மிக சுகத்தைத் தேடியடைகின்ற வேட்கையினாலும், சிறப்பான பொருளாதாரக் கொள்கைகளை வரையறுக்க வேண்டிய கட்டாயத்தினால் உந்தப்பட்டு அவற்றைத் தேடியடைகின்ற தவிப்பினாலும், வலுவான குடும்பக் கட்டமைப்பு, மிக உயர்வான குடும்ப மாண்புகள் ஆகியவற்றைத் தேடியும் மக்கள் மிகப் பெரும் அளவில் மன எழுச்சியுடன் பொதுவாக கிழக்கத்திய மதங்களின் பக்கமும் குறிப்பாக இஸ்லாத்தின் பக்கமும் பாய்ந்தோடி வந்துக்கொண்டிருக்கின்றார்கள். இது போன்ற நிலைமைகளில் மற்றெல்லா கிழக்கத்திய மதங்களைக் காட்டிலும், தத்துவ நெறிகளை விடவும் கோட்பாட்டிலும் சரி, ஒழுக்க போதனைளிலும் சரி, ஆன்மிகக் கட்டமைப்பிலும்சரி உறுதியானதாகவும் வலுவானதாகவும் இருப்பதாலும், நிலையான, மாறாத அடிப்படைகளைக் கொண்டதாகவும் இருப்பதால் இஸ்லாம் மிக எளிதாகவும் அதிகமாகவும் மக்களைக் கவர்ந்துக்கொள்ளும் என்றே மேற்கத்திய கொள்கை விற்பன்னர்கள் கருதுகின்றார்கள். 

இந்த நிலைமை ஒரு பக்கம் இருக்க, மறுபக்கமோ மேற்கத்திய உலகம் தன்னுடைய சித்தாந்த அடிப்படைகள் குறித்து மிக மிகக் கடுமையான அதிருப்திக்கு ஆளாகி நிற்கின்றது. இந்த அதிருப்தியும் மனக்குறைகளும் அவர்களை எந்த அளவுக்கு ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கின்றனவெனில் அமெரிக்காவையும் அமெரிக்க வாழ்க்கை நெறியையும் தூக்கி வைத்துக் கொண்டாடி வந்த தாமஸ் ஃபிரைட்மான் போன்ற பன்னூல் ஆசிரியரே மனம் நொந்து விரக்தி கீதம் பாடத் தொடங்கியிருக்கின்றார். நிராசை நிறைந்த இந்தப் பாடல் வரிகள் இன்று அமெரிக்காவின் தேசிய கீதமாய் ஆகிவிட்டிருக்கின்றது.
அந்தப் பாடலின் வரிகளைக் கேளுங்கள்:

I was going where I shouldn't go...... Seeing who I shouldn't see
எந்த இடத்திற்கு நான் போயிருக்கக் கூடாதோ அந்த இடத்துக்கே நான் போய்க் கொண்டிருந்தேனே...
எதனையெல்லாம் நான் பார்க்கவே கூடாதோ அவற்றையே நான் பார்த்துக்கொண்டிருந்தேனே...

Doing what I shouldn't do...... And being who I shouldn't be
எவற்றையெல்லாம் நான் செய்திருக்கவே கூடாதோ அவற்றையே நான் செய்துக்கொண்டிருந்தேனே...
எப்படியெல்லாம் நான் ஆகியே இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் நான் ஆகிவிட்டிருந்தேனே....

I used to think that I was strong..... But lately I just lost the fight.
நான்தான் பலசாலி என்றே நான் என்னை நானே நினைத்து வந்தேனே.....
ஆனால் இப்போது நடந்த சண்டையில் தோற்றுப்போய் நிற்கின்றேனே.....

மறுபக்கம் இஸ்லாமிய உலகம் எந்தக் கீதத்தை பாடிக் கொண்டிருக்கின்றது, கவனித்தீர்களா?

லா அஸ்கரிய்யா  வலா தெக்தாதோரியா.....
இராணுவ ஆட்சியும் வேண்டாம்.... சர்வாதிகார ஆட்சியும் வேண்டாம்....

வலா இல்மானிய்யா.... வலா ஸயூக்ராதிய்யா....
செக்குலரிசமும் வேண்டாம்... தியாக்ரஸியும் வேண்டாம்...

கராமத்து வஇஸ்ஸது வஇன்சானிய்யா...
ஹிஸாரத்து மிஸ்ருல் இஸ்லாமிய்யா...
கண்ணியமும் மதிப்பும் மனித மாண்பும் வேண்டும்...
எகிப்து மண்ணில் இஸ்லாமே வேண்டும்....

எகிப்து மண்ணில் மட்டுமா இந்த முழக்கங்கள் எதிரொலிக்கின்றன? மொராக்கோவின் சந்தைகளிலும் துனிஸீயாவின் காஃபிக் கடைகளிலும் அல்லவா இவை தொடர்ந்து எதிரொலிக்கின்றன? இன்னும் சொல்லப்போனால் எகிப்தின் இருள் சூழ்ந்த சிறைக்கொட்டடிகளிலும் சிரியாவின் சித்திரவதைக் கூடங்களிலும் அல்லவா இந்த புரட்சி கீதம் புதுத் தெம்பையும் புதிய எழுச்சியையும் ஊட்டி வருகின்றது..!

இவையிரண்டுக்கும் இடையிலான வேறுபாடு மிக மிகத் தெளிவாகத் தெரிகின்றது. ஒரு பக்கம் தாமஸ் ஃபிராட்மேனின் பாடல் இலையுதிர் காலத்திய சோகக் கீதமாக இருக்கின்றது எனில் மறு பக்கம் இஸ்லாமிய உலகத்தில் எதிரொலிக்கின்ற முழக்கங்களோ இஸ்லாமிய வசந்தத்தின் வருகையைக் கொண்டாடுகின்ற எழுச்சி கீதங்களாய் அதிர்கின்றன. ஒரு பக்கம் மூப்பும் பிணியும் தொற்றிக் கொண்டதால் நிராசையிலும் வருத்தத்திலும் உழல்கின்ற முதியவனின் ஒப்பாரி கேட்கின்றது எனில், மறு பக்கம் நெட்டி முறித்தவாறு தூக்கத்தைக் கலைத்துக்கொண்டு எழுந்து நிற்கின்ற இளைஞனின் ஆர்ப்பரிப்பும், எழுச்சியும் நிறைந்த உரிமை கீதங்கள் விண்ணை முட்டுகின்றன. இதுதான் மேற்கத்திய பண்பாட்டுக்கும் இஸ்லாத்துக்கும் இடையில் இன்று காணப்படுகின்ற வித்தியாசம் ஆகும்.

ஒருபக்கம் மேற்கத்திய உலகம் தன்னுடைய சித்தாந்தங்கள் மீதும், தன்னுடைய பாரம்பர்யத்தின் மீதும், தன்மீதும், தன்னுடைய சிஸ்டத்தின் மீதும் தான் இது வரை தூக்கிக்கொண்டாடி வந்த மாண்புகள் மீதும் நிராசையடைந்து சலிப்புற்று நிற்கின்றது எனில், மறுபக்கமோ இஸ்லாமிய உலகில் இருக்கின்ற ஒவ்வொரு மனிதரும் இஸ்லாத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் பற்றும் கொண்டவராய் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்கின்றார். இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமிய சிஸ்டத்தின் மீதும் இஸ்லாமிய மாண்புகளின் மீதும் முஸ்லிம்களின் நம்பிக்கையும் பற்றும் பன்மடங்கு அதிகரித்துவிட்டுள்ளன. உலகெங்கும் இதே நிலைமைதான். இதற்குச் சான்றாக ஏராளமான சர்வே முடிவுகளையும் புள்ளிவிவரங்களையும் சொல்ல முடியும். அதற்கான நேரம் இங்கு இல்லை.

இஸ்லாத்துடனான நெருக்கமான பற்றின் விளைவாக முஸ்லிம்கள் மிகப் பெரும் அளவில் முன்னேற்றத்தையும் கண்டு வருகின்றார்கள். இன்றைய நாளில் அறிவியல் ஆய்வுகளின் செயல்வேகத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தோமேயானால் உலகம் முழுவதிலும் ஈரான் தான் முதலிடத்தில் நிற்கின்றது. துருக்கியிலோ ஏகேபியின் ஆட்சியின் கீழ் மிக உயர்ந்த படித்தரங்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரைகள் பதிப்பிக்கப்படுவது ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. ஆய்விலும் ஆராய்ச்சியிலும் ஈடுபடுகின்ற பெண்களின் எண்ணிக்கையைப் பொருத்த வரை இன்று ஒட்டுமொத்த அய்ரோப்பாவில் துருக்கிதான் முதல் இடத்தை வகிக்கின்றது. இனி வருங்காலங்களில் சர்வதேசப் பொருளாதாரத்தை வரையறுப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கக்கூடிய நாடுகளாய் அடையாளம் காணப்பட்டுள்ள பதினோரு நாடுகளில் ஏழு முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன.

நண்பர்களே!  
இந்த மாதிரியான நிலைமைகள்தாம் இஸ்லாமோ ஃபோபியா என்கிற கருத்தாக்கத்துக்கு வழி அமைத்திருக்கின்றன. இத்தகைய நிலைமைகள்தாம் மத்தியக் கிழக்கில் இரத்தக் களரிக்கான உண்மையான காரணங்கள் ஆகும். இஸ்லாமிய இயக்கங்களுடனான பகைமை உணர்வுகள் மூட்டிவிடப்படுவதற்கும் இவைதாம் காரணம் ஆகும்.